Sunday, May 30, 2021

என்னோடு சண்டையிடலாமா?

Oodal

விண்ணோடு வெண்ணிலா வரும் நேரத்திலே
உன்னோடு நான் கூடும் நேரத்திலே
கண்ணோடு காதல் சொல்லும் நேரத்திலே - நீ
என்னோடு சண்டையிடலாமா?

ஏமாற்றம் ஏனடி கண்ணே?
உனைமாற்றத்தானே நான் வந்தேன்
நடமாடும் நவநாகரீகம் அதை
தடைபோட்டு உடைப்போமே நாமும் 

நான் பாடும் பாடல் நீ கேளாயோ?
நான் வாடும் நிலையும் நீ அறியாயோ?
ஊனாட உள்ளே நீ உயிராக வந்தாய்
ஏன் நாடகம் இனி ஏன் தாமதம்? 

தேடலால் கிடைக்காத அரிய இன்பமே
பாடலால் சொல்லமுடியா புதிய எண்ணமே
ஊடலால் ஒன்றிணையும் நமது உள்ளமே 
ஆதலால் வரைந்திடுவோம் காதல் வண்ணமே!

                                                                             - Sai

Saturday, February 13, 2021

அன்புசெய்த அதிசயம்!

 https://img.sheroes.in/img/uploads/post/1370436_201903101220412021.cropped167327032.jpg?tr=w-760

 

 

 

 

 

 

 

 

 


பண்பாடா பேதைபோலே
பக்கம்வந்து பேசினாளே
வெண்காட்டுக் கோதைவந்து
சூட்டினாளே மாலையை!

களங்கமற்ற காதல்மாது 
அருவமான அரக்கனாலே
பிரிந்துநின்றாள் சீதையாய்!
புலம்பலானாள் பேதையாய்!

பாதைமாறும் வேளைமாறும்
காலச்சுழல் கட்டுக்குள்ளே
நாளைவரும் நேரம்கூடும்
நாடிநாதம் கூவுதே!

கேட்டசொல்லும் கூடுமோ?
நாட்டைத் தாண்டிக்காட்டுமோ?
வாடாமலர் விழியாளை
வாட்டும் நிலையும் மாறுமோ? 

கொண்டநூறு காயங்கள்
காற்றிலாடும் தீபமாய்
மறைந்துவிட்ட மாயமென்ன
வினவினேன் பரிதாபமாய்!

நித்தம்செய்த தவமோ? இல்லை
இறைவனளித்த வரமோ? இல்லை
அன்புசெய்த அதிசயமென
ஆடுவோம் ஆனந்தமாய்!  

                                - Sai