
கனா காண்கிறேன்
கண்கள் திறந்தபடி! - காதல்
சொல்ல விழைகிறேன்
வார்த்தை தடுக்குதடி!
நெஞ்சம் பதைக்கும்
இந்த நிலையும்
என்று மாறுமோ? - என்
எண்ணக் கூட்டில்
வண்ணம் பூசிட
அடைத்த காதல்
வெளியில் பறந்திட - முதல்
முத்தம் தருவாயோ? நீயடி!
மந்தகாசம் சிந்தும் உன்முகம்
எந்தன் இதயத் துடிப்பின் உதிரம்
கூந்தல் அழகோ நதியின் வடிவம்
வாஞ்சையாய் என் விரல்கள் நெருடும்
காந்தக் கண்கள் காதல் காட்டிடும்
சாந்தக் குரலோ தேனை ஊட்டிடும்
விந்தை மயக்குதடி என்
சிந்தை கிரங்குதடி!
இரு தந்தி கொண்ட வாழ்க்கை வீணையில்
காதல் வந்து மீட்டும் தருணம்
ஒற்றை உயிராய் தாமும் மாறி
இன்ப இசையை உலகில் பொழியும்
அழகைக் காண்போமா? சொல்லடி!
- Sai
No comments:
Post a Comment